சென்னை: வடசென்னை மாவட்ட மக்கள் நீதி மய்ய கட்சி பொறுப்பாளர் பிரியதர்ஷினி நேற்று மாலை செம்பியம் உதவி காவல் ஆணையரிடம் அளித்த புகார்: கடந்த 13ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் பத்திரிகையாளர் சந்திப்பின் போது மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமலஹாசனை கொழுப்பெடுத்த நாக்கை அறுப்பேன் என்றும், மக்கள் அனைவரும் அவரது நாக்கை அறுக்கவேண்டும் என்று வன்முறையை தூண்டும் விதமாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.
அமைச்சர் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் படி பதவிப்பிரமானம் செய்துகொண்டார். அதை மறந்து கட்டப்பஞ்சாயத்து செய்பவர் போன்று பேசியுள்ளார். ஆகவே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறியுள்ளார். அமைச்சர் மீது பெண் ஒருவர் புகார் கொடுத்தது வட சென்னை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.