செங்கம், மே 16: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அல்லியந்தல் கிராமத்தில் தூயலூர்து மாதா தேவாலயத்தில் நேற்று முன்தினம் தேர் திருவிழா நடந்தது. இரவு 10 மணியளவில் அலங்கரிக்கப்பட்ட தேரில், மாதா சிலை முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்தது. முத்துவீதி வழியாக வந்தபோது, அங்குள்ள மின் கம்பத்தில் இருந்த மின்வயர் எதிர்பாராதவிதமாக தேரின் உச்சியில் உரசியது. இதில் தேர் முழுவதும் மின்சாரம் பாய்ந்தது. அப்போது அங்கிருந்த அதே கிராமத்தை சேர்ந்த அன்பரசு(50), ஜெபராஜ்(40) ஆகியோர் மீதும் மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பிரேம்ராஜ்(37) என்பவர் லேசான காயமடைந்தார்.