×

கடைகளை உடைத்து திருடிய ஆந்திரா கொள்ளையன் கைது

அண்ணாநகர்: அண்ணாநகர் போலீசார் நேற்று அதிகாலை 5 மணிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மெட்ரோ ரயில் நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில், திரிந்த வாலிபரை பிடித்து விசாரித்தபோது ஆந்திராவை சேர்ந்த பிரபல கொள்ளையன் ஊமையன் மார்க் (எ) சிவா (29) என தெரியவந்தது.

வாய் பேச முடியாத இவர் கொத்தனார் வேலை பார்ப்பதுபோல் கையில் கடப்பாரையை வைத்துக்கொண்டு இரவு நேரங்களில் பூட்டிய கடைகளின் ஷட்டர்களை உடைத்து திருடியதும், அண்ணா நகரில் பூட்டிய கடைகளை உடைத்து பல லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடியதும் தெரிந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இவர் மீது வடபழனி, அண்ணா நகர், கொடுங்கையூர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

* அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அனீஸ் சச்சுவா (22). திருமங்கலம் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி. நேற்று முன்தினம் இரவு அனீஸ் சச்சுவா பணியில் இருந்தபோது அங்கு வந்த வாலிபர் அனீஸ் சச்சுவாவின் கையில் வெட்டிவிட்டு செல்போனை பறித்துக்கொண்டு தப்பினார்.
புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த நந்தா (எ) நந்தகுமார் (19) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

* திருவொற்றியூர் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் திருமகள் (42). இவர் குரோம்பேட்டை, நேருநகர் பகுதியில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வேலை முடிந்து குரோம்பேட்டை ரயில் நிலையம் அருகே நடந்து வந்தார். அப்போது வந்த மர்ம நபர் திருமகளின் கழுத்தில் கிடந்த 4 சவரன் செயினை பறிக்க முயன்றார். பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து சிட்லப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் பழைய பல்லாவரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (32) என தெரிந்தது. எனவே போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

* மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்தவர் விஷால் (23). நேற்று முன்தினம் மயிலாப்பூர் கார்டன் சாலையில் தனது நண்பர் ஒருவருக்காக பைக்கில் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் விஷாலிடம் தனது நண்பர் வீட்டை மாற்ற உள்ளதாகவும், உதவிக்கு வந்தால் ரூ.7 ஆயிரம் பணம் தருவதாகவும் கூறி அழைத்து சென்றார். பின்னர் அவரது பைக்கை வாங்கி சென்று தலைமறைவானார். இதுகுறித்து அபிராமபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான மர்ம நபரை தேடி வருகின்றனர்.

* மேற்கு தாம்பரம், சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் அபுபக்கர். மேற்கு தாம்பரம், ராஜாஜி சாலையில் பிரியாணி கடை நடத்துகிறார்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த, அவரது நண்பர் சதிஷ் (எ) சதிஷ்குமார் (27) என்பவர் காரை கடனாக கேட்டு வாங்கி சென்றுள்ளார். பின்னர் அவர் தலைமறைவானார். புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.


Tags : Andhra ,shops , Shops, stolen, robbers, arrested
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...