* ஏற்கனவே 6 பேர் பலியான அதே ஆலையில் மீண்டும் சோக சம்பவம்
திருவேங்கடம்: திருவேங்கடம் அருகே இன்று மதியம் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 தொழிலாளர்கள் உடல் கருகினர். ஏற்கனவே 3 மாதத்திற்கு முன் இதே ஆலையில் பட்டாசுகள் வெடித்ததில் பெண்கள் உள்பட 6 பேர் பலியாகினர். அதற்குள் இன்று மீண்டும் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. நெல்லை மாவட்டம் திருவேங்கடம் அருகே வரகனூரில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வந்தது. பல அறைகள் கொண்ட இந்த ஆலையில் பெண்கள் உள்பட ஏராளமானபேர் வேலைபார்த்து வந்தனர். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 22ம்தேதி ஆலையில் பட்டாசு அறைகளில் தீப்பிடித்துக்கொண்டது. இதில் பட்டாசு அறைகள் தரைமட்டமானதோடு பெண்கள் உள்ப 6 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். பலர் கருகிய நிலையில் சிகிச்சை பெற்றனர். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதைத்தொடர்ந்து அந்த ஆலைக்கு உடனடியாக சீல் வைக்கப்பட்டது.
மற்ற அறைகள் தரை மட்டமானபோதிலும் ஒரு அறைமட்டும் தனியாக இருந்தது. அதில் ஏற்கனவே தயார் செய்யப்பட்ட பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தன. இதற்கிடையில் இந்த ஆலைக்கு பக்கத்தில் தனியார் ஒருவரது நிலத்தில் கருவேல மரங்கள் வளர்ந்து வந்தன. அதை வெட்டுவதற்கு அதன் சொந்தக்காரர் முடிவு செய்து தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்தார். இதைத்தொடர்ந்து இன்று காலை கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள மாங்குடி கிராமத்தை சேர்ந்த 8 பேர் மரம் வெட்ட வரகனூர் வந்தனர். காலையில் வேலையை தொடங்கிய அவர்கள் மதியம் அங்கேயே பொங்கி சாப்பிடுவதற்காக அதற்குரிய பாத்திரங்களை கொண்டு வந்திருந்தனர். காலை 11 மணியளவில் 8 பேரில் 2 பேர் கடைக்கு சாமான் வாங்க சென்றனர். ஒருவர் அருகில் உள்ள கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்றார். மற்ற 5 பேர் ஏற்கனவே பட்டாசு இருந்த அந்த அறையை ஒட்டி அடுப்பு அமைத்தனர். அதன்பிறகு விறகு போட்டு பற்றவைத்தனர்.
கோடை நேரம் என்பதால் விறகு கொழுந்து விட்டு எரிந்தது. அந்த நேரம் காற்றும் வீசியதால் விறகில் இருந்து தீப்பொறி நாலாபுறம் பரவியது. பட்டாசு அறையினுள் எப்படியே தீப்பொறி சென்று விட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்த பட்டாசுகளில் தீப்பொறி பட்டு பயங்கர சத்தத்துடன் வெடிகள் வெடித்து சிதறின. அதோடு அந்த அறையும் தரை மட்டமானது. அப்போது சமையல் செய்து கொண்டிருந்த 5 பேர் அதில் சிக்கிக்கொண்டனர். அவர்கள் உடலில் தீப்பற்றி கொண்டது. இந்த விபத்தில் மாங்குடியைச்சேர்ந்த கோபால்(61), கனகராஜ்(48), பாலகுரு மகன் அர்ஜூன்(17), குருசாமி(62), காமராஜ்(58) ஆகிய 5 பேர் உடல் கருகி உயிருக்கு போராடினர். தகவலறிந்து திருவேங்கடம் போலீசார் மற்றும் சங்கரன்கோவில், வெம்பகோட்டை, கோவில்பட்டி, சிவகாசி ஆகிய 4 இடங்களில் இருந்து தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்ததோடு காயமடைந்த 5 பேரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். இந்த விபத்தில் சிக்கிய அர்ஜூன் பள்ளி மாணவர், தற்போது கோடை விடுமுறை என்பதால் அவரும் பணம் கிடைக்கும் என்ற ஆவலில் கூலி வேலைக்கு வந்திருக்கிறார். பட்டகாலிலே படும் என்பார்கள். அதுபோல் ஏற்கனவே விபத்துக்குள்ளான பட்டாசு ஆலையில் இன்று மீண்டும் பட்டாசு வெடித்திருப்பது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் அந்த அறையை மட்டும் அதிகாரிகள் எப்படி சீல் வைக்காமல் விட்டார்கள் எனவும் விசாரணை நடக்கிறது.