திருச்சி: இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை நடமாட விடமாட்டோம் என மன்னார்குடி ஜீயர் எச்சரித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தேர்தல் பிரசாரத்தின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், ‘‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து; அவர் தான் நாதுராம் கோட்ஸே’’ என்று சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை கூறியிருந்தார். பல்வேறு தரப்பினரும் கண்டனங்களையும், ஆதரவையும் தெரிவித்து இருக்கும் நிலையில், கமலுக்கு எதிராக இந்து அமைப்பு மற்றும் பாஜ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது.தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களிலும் கமல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், செண்டலங்கார மன்னார்குடி செண்பக மன்னார் ஜீயர் திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அவரது மடத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் லஞ்சம் பெற்று கொண்டு, இந்து மதத்திற்கு விரோதமாக பேசி வருவதாக குற்றம் சாட்டினார். இந்து அமைப்புக்கள் இணைந்து, கமல்ஹாசனை வெளியே நடமாட விடமாட்டோம் எனவும் அவர் எச்சரித்தார்.
கமலின் கருத்து குறித்து பிரதமர் மோடியும் பதில் அளித்துள்ளார். அவர், தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், ‘‘எந்த ஒரு இந்துவும் தீவிரவாதியாக இருக்க முடியாது. ஒருவர் தீவிரவாதியாக இருந்தால் அவர் கண்டிப்பாக இந்துவாக இருக்க முடியாது. உலகம் ஒரே குடும்பம் என்பதுதான் இந்து மதத்தின் கொள்கை. அதைத்தான் இந்து மதம் மக்களிடம் போதிக்கிறது’’ என்று மோடி, கமலின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளார்.