உலகில் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்ட இனம் பூச்சி இனம்தான். பொதுவாக பூச்சி இனங்களில் பல்வேறு பாதிப்புகளை மனிதனுக்கு ஏற்படுத்துபவையே அதிகம். ஆனால், ஈ வகையைச் சேர்ந்த தேனீ மனிதனுக்கு உணவாகவும், பல்வேறு நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படும் தேனை அளிக்கிறது. தேனீக்களில் ராணித் தேனீ, ஆண் தேனீ, வேலைக்காரத் தேனீக்கள் என மூன்று வகை உள்ளன. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு உடல் அமைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மூன்று தேனீக்களின் கூட்டணியால் உருவாவதுதான் தேன்கூடு.
பூவின் மகரந்தத்திலிருந்து தேனை உறிஞ்சி அவற்றை சேகரித்து வைக்கும் பெட்டகமாக இந்தத் தேன்கூட்டை பயன்படுத்துகின்றன தேனீக்கள். பொதுவாக ஒவ்வொரு உயிரினத்திலும் ஆண், பெண் என்ற வேற்றுமையை உணர்த்தும் உடல் உறுப்பு வித்தியாசம் மட்டுமே இருக்கும். ஆனால், தேனீக்களில் மட்டும் மூன்று வகையான உடல் அமைப்புகள் உள்ளன.ஒரு தேன்கூடு என்றால் ராணித்தேனீ ஒன்றே ஒன்றுதான் இருக்கும். ஆண் தேனீக்கள் நூற்றுக்கணக்கிலும், வேலைக்காரத் தேனீக்கள் ஆயிரக்கணக்கிலும் இருக்கும். ராணித்தேனீ மற்ற இரு வகை தேனீக்களை விட அளவில் பெரியதாக இருக்கும்.
கூடுகளில் இருக்கும் மற்ற எல்லா தேனீக்களுக்கும் இதுதான் தாயாகும். ராணித் தேனீக்கு கொட்டக்கூடிய கொடுக்குகள் உள்ளன. இவை மீண்டும் மீண்டும் வளரும் தன்மை கொண்டவை. ஆனால், ஆண் தேனீக்களுக்கு கொடுக்குகள் இல்லை. அதே சமயம் வேலைக்காரத் தேனீக்களுக்கு விழுந்துவிட்டால் மீண்டும் முளைக்காத கொடுக்குகள் உள்ளன. ஆண் தேனீக்கள் ராணித் தேனீயுடன் உறவு கொண்டவுடன் உயிரிழந்துவிடும். ராணித் தேனீ முட்டையிலிருந்து முழு வளர்ச்சி அடைந்து பிறக்க 16 நாட்கள் ஆகின்றன. ஆனால், ஆண் தேனீக்கள் பிறக்க 24 நாட்களும், வேலைக்காரத் தேனீக்கள் பிறக்க 21 நாட்களும் ஆகின்றன.