கோவை: தமிழக முதல்வரின் ஊழல் பட்டியல் வரும் மே 23ம் தேதிக்கு பிறகு வெளியிடப்படும் என்றும் இதில் 4, 5 அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி என அமமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் கூறினார். அ.ம.மு.கழக செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பிரசாரத்தின்போது எப்படி பேச வேண்டும் என தெரியாமல் முதல்வர் எடப்பாடி பேசுகிறார். நாக்கை அறுப்போம் என ஒரு அமைச்சரே பேசுவது நாகரீகம் அல்ல. கமல்ஹாசனின் கருத்து தவறு என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கலாம். அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசுவதை பார்த்துவிட்டு, கண்டனம் தெரிவிக்காமல் முதல்வர் மவுனமாக இருப்பது ஏன்? இன்று நடிகர் நாக்கை அறுப்பேன் என்பவர், நாளை முதல்வரின் நாக்கை அறுப்பேன் என்பார்.
அமைச்சர் ராஜேந்திரபாலாஜியை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். அவர், மந்திரி பதவிக்கு தகுதியில்லாதவர். அவரது மந்திரி பதவியை, தமிழக முதல்வர் பறிக்க வேண்டும். எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவி கொடுத்தது சசிகலாவா? ஜெயலலிதாவா? என்பதை, முதல்வர் விளக்க வேண்டும். வரும் 23ம் தேதி தேர்தல் முடிவிற்கு பின்னர் முதல்வரின் ஊழல் பட்டியல் வெளியிடுவோம். எந்தெந்த வேலைகளில் எவ்வளவு ஊழல் செய்தார்கள் என்ற பட்டியலும் வெளிவரும். முதல்வருடன் சேர்ந்து, 4 அல்லது 5 அமைச்சர்கள் சிறை செல்வது உறுதி. இவ்வாறு புகழேந்தி கூறினார்.