மக்களவை தேர்தலில் இதுவரை 6 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டது. 7வது கட்டமாக வருகிற 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இறுதி கட்ட தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “ ஊழியர், தலைமை ஊழியர், டீ விற்பனை செய்பவர், காவலர் என்ற பல உருவத்தில் ஏராளமான தலைவர்கள, தவறான பாதையில் மக்களை வழிநடத்தியதை இந்த நாடு பார்த்துள்ளது. ஆனால், தற்போது இந்த நாட்டுக்கு அரசியலமைப்பின்படி மக்கள் நல உணர்வுடன் சேவையாற்றக் கூடிய கலப்படமில்லாத தூய்மையான பிரதமர் அவசியமாகும். நரேந்திர மோடியின் அரசு கவிழ்ந்து கொண்டிருக்கிறது.
இது, அனைவருக்கும் தெரியும். இதற்கு மிகப்பெரிய காரணம் ஆர்எஸ்எஸ் மோடி அரசை கைவிட்டு விட்டது. பாஜ.விற்காக கடுமையாக உழைக்கும். ஒரு ஆர்எஸ்எஸ் தொண்டரை கூட நான் பார்க்கவில்லை. பாஜ.வின் பை நிறைய நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளும், மக்களின் மனக்கசப்புக்களும் தான் நிரம்பி இருக்கிறது. இதன் எதிரொலிதான் மோடிக்கு வியர்கிறது,’’ என்றார்.