×

பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கு திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிஐ சோதனை: மேலும் சிலர் சிக்குகின்றனர்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் நேற்று, சிபிஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். மேலும், பொதுமக்களிடமும் விசாரணை நடத்தினர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை பொள்ளாச்சி கிழக்கு ஸ்டேஷன் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பின்னர், கடந்த ஏப்ரல்  27ம் தேதி வழக்கு விசாரணை சிபிஐக்கு மாறியது. இதையடுத்து, சிபிஐயை சேர்ந்த நான்கு பேர் கொண்ட குழுவினர் கடந்த 2 வாரமாக பொள்ளாச்சியில் ரகசிய விசாரணை நடத்தினர். திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் வீட்டிலும் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், நேற்று மாலை 4 மணி அளவில் திருநாவுக்கரசின் பண்ணை வீட்டிற்கு சிபிஐ அதிகாரி கருணாநிதி தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழுவினர் வந்தனர். அவர்கள், திருநாவுக்கரசு பண்ணை வீட்டை சுற்றிலும் சோதனை மேற்கொண்டனர். பிறகு, வீட்டிற்குள் சென்று வீடியோவில் பதிவான பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது திருநாவுக்கரசு மற்றும் அவரது நண்பர்கள் பெண்களை அழைத்து வந்து மிரட்டி, பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட இடம் இதுதான் என சிபிஐ அதிகாரிகள் உறுதி செய்ததாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரம் திருநாவுக்கரசு வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதன்பின், பண்ணை வீட்டின் அருகே உள்ள வீதியில் வசிக்கும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர்.

 பல மணி நேரம் நடைபெற்ற ஆய்வுக்குப்பின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றவாளியான திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் உள்ள அனைத்து அறைகளிலும் சோதனை செய்யப்பட்டது. மேலும் வீட்டை சுற்றிலும் தனி குழுவினர் சோதனை செய்தனர். ஆய்வு செய்யப்பட்ட அனைத்து பகுதிகளும் வீடியோ, புகைப்படப் பதிவு செய்யப்பட்டு ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் நடப்பது இது முதல் கட்ட ஆய்வாகும். அடுத்து சிபிஐ உயர் அதிகாரிகள் கொண்ட குழு நேரடியாக வந்து அடுத்த கட்ட ஆய்வில் ஈடுபட உள்ளனர்’’ என்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், இன்னும் பலரிடம் சிபிஐ போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.


Tags : Pollachi ,farm ,CBI ,Thirunavukara , Pollachi, rape case, Thirunavukarasu, CBI test
× RELATED பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரிப்பு