மும்பை: ரபேல் விமான ஒப்பந்தத்தின் ரகசிய ஆவணங்கள் வெளியானது குறித்து துறை மட்டத்திலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான மறுசீராய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் சமீபத்தில் விசாரிக்கப்பட்டது. அப்போது, அந்த மனுவில் தாக்கல் செய்யப்பட்ட ரபேல் தொடர்பான ரகசிய ஆவணங்கள், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டவை என மத்திய அரசு கூறியது.
இந்நிலையில், மும்பைசமூக ஆர்வலர் அனில் கல்காலி ஆர்டிஐ மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ‘ரபேல் ஆவணங்கள் திருடு போனது பற்றி பிரதமர் அலுவலகத்திற்கோ, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கோ தெரியுமா? தெரியும் என்றால், போலீசில் புகார் கொடுக்கப்பட்டு உள்ளதா?’’ என கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள பாதுகாப்பு அமைச்சகம், ‘துறை ரீதியிலான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது’ என கூறியுள்ளது.