×

எவர் உயிருக்கும் பாதுகாப்பு இல்லை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு உள்ளதா?: முத்தரசன் கேள்வி

சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா என்று முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
 தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பெரும் கேள்விக்குறியாகி வருவது மிகுந்த கவலை அளிக்கின்றது. குறிப்பாக, பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்ந்து நீடித்து வருவது கடும் கண்டனத்திற்குரியது. பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொது வெளியில் கூட பெண்கள் தனியாக செல்ல முடியாத அளவிற்கு, அவர்கள் அணிந்துள்ள நகைகளை அபகரிக்கும் சமூக விரோதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சியில் கல்லூரி மாணவி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.  இதனைப் போன்ற கொடூர சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இச்சம்பவங்களில் உண்மையான குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தமிழக அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.


 குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை செய்யப்படுவது, பெண்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி சீரழிப்பது போன்ற சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்வது, மிகுந்த கவலைக்குரியது. எனவே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா எனக் கேள்வி எழுகின்றது. சமூக ஆர்வலர் முகிலன் கதி என்ன ஆனது என்ற வினாவிற்கு பல மாதங்கள் ஆன நிலையிலும் பதில் இல்லை. இதன் மூலம் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu , Law, Order, muttaracan
× RELATED மோடியை மிஞ்சும் வகையில் வியூகம்;...