×

சரித்திரத்தை சரியாக படிக்காத கமல் தமிழக மக்களால் ஓரங்கட்டப்பட வேண்டியவர்: பொன்.ராதாகிருஷ்ணன் தாக்கு

சென்னை: நடிகர் கமல்ஹாசன் தமிழக மக்களால் ஓரங்கட்டப்பட வேண்டியவர் என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு 11.15 மணிக்கு  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வாரணாசியில் போட்டியிடும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக, தமிழர்கள் உள்ள பகுதிக்கு சென்று வாக்கு சேகரித்தோம். வாரணாசியில் கடந்த முறை போட்டி இருந்தது. இந்த முறை யாரும் போட்டியாக கருத முடியாது. இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெறுவார். கமல்ஹாசன் அர்த்தமற்ற வார்த்தைகளை பேசியுள்ளார். காந்தியை கொன்ற விஷயத்தை யாராலும் ஏற்கமுடியாது. காந்தியின் பக்தரா, பினராயி விஜயனின் பக்தரா என்பதை அவரால் சொல்ல முடியவில்லை. தெய்வத்திற்கு அடுத்தபடியாக போற்றக்கூடியவராக காந்தி உள்ளார். அதற்கு மத சாயத்தை கமல்ஹாசன் பூசுகிறார் என்றால் சரித்திரத்தை அவர் சரியாக படிக்கவில்லை என்றுதான் அர்த்தம். எக்காரணத்திற்காக கமல்ஹாசன் அவ்வாறு சொன்னார் என்று தெரியவில்லை.

கமல்ஹாசன் போன்ற அரசியல்வாதிகள், தமிழக மக்களால் ஓரங்கட்டப்பட வேண்டியவர் என்பதை தனது வார்த்தைகள் மூலமாக நிரூபித்து காட்டி உள்ளார். பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற போகிறது. பாஜ தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க கூடிய வகையில் பலம் பொருந்திய கட்சியாக வர போகிறது. கடந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி எப்படி ஆட்சி அமைத்ததோ அதுபோல் மோடி ஆட்சி அமைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Ponnarathakrishnan ,Kamal ,Tamilnadu , Kamal, Ponnar Radhakrishnan, assault
× RELATED கமலுடன் மீண்டும் இணைந்த லோகேஷ் கனகராஜ்