தூத்துக்குடி: டிடிவி தினகரன் ஒரு காமெடி பீஸ் என தூத்துக்குடியில் நடந்த பிரசாரத்தில் நடிகை விந்தியா பேசினார்.ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட தூத்துக்குடி கேடிசிநகர், தாளமுத்துநகர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா வாக்குகள் சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: என்னை உருவாக்கிய சிற்பி, அன்பு காட்டியவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான். ஏழைகளின் வீட்டில் இருளை விரட்ட மின்சாரம் தந்தவர். கர்ப்பிணி பெண்களை காக்க வந்தவர். காவிரி தண்ணீரை கொண்டு வந்தவர். வளமான தமிழகம் தழைக்க ஆசைப்பட்டவர். அவரை நினைத்து உருகும் உண்மை விசுவாசிகள் தான் அதிமுகவில் உள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கால் வைத்தாலே தனி தெம்பு வரும். இங்கு சுவாசிக்கும் காற்றில் கூட உப்பு இருக்கும். இங்குள்ள மக்களின் ரோஷம் உலகில் யாருக்கும் இருக்காது. சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரால் அழிக்க முடியாத ஊர் ஓட்டப்பிடாரம். வஉசி உள்ளிட்ட தலைவர்கள் பிறந்த ஊர் இது. இந்த தேர்தலில் நாம் கட்சியை காக்க வீரத்தையும், விசுவாசத்தையும் காண்பித்து வெற்றியை பெற்று ஜெயலலிதாவுக்கு காணிக்கையாக்க வேண்டும். தமிழகத்தில் ஒரு சிறந்த காமெடி பீஸ் டிடிவி தினகரன் தான். என்ன கேள்வி கேட்டாலும் சிரித்துக் கொண்டே பேசுவார். சிரிக்க வச்சு சிரிக்க வச்சு பேசினா ஜோக்குன்னு சொல்வோம். சிரிக்சுக்கிட்டே பேசினா பேக்குன்னு தான் சொல்லுவோம். பணம் கொடுக்கிறேன்னு சொல்லி ஏமாற்றி ஓட்டு வாங்குவது மகா கேவலம். அதனை செய்தவர் டிடிவி தினகரன். எலெக்சன் கமிஷனருக்கே பணம் கொடுக்க நினைத்தவர் டிடிவி.
கண்ணாடி போட்டவரெல்லாம் காந்தியாக முடியாது, தொப்பி போட்டவரெல்லாம் எம்ஜிஆராக முடியாது. 60 நாளில் ஆட்சியை கலைச்சிடுவேன் என்றார். ஆனால் அவரால் என்றும் ஒன்றும் செய்ய முடியாது. இந்த யுத்தத்தில் இரட்டை இலை வெல்லும். இவ்வாறு அவர் பேசினார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி, செல்லப்பாண்டியன், எம்பி பிரபாகரன் உள்ளிட்டவர்கள் இருந்தனர்.