குமரி: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவபொம்மையை பாஜகவினர் எரித்தனர்.
தமிழகத்தில் அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து நடிகர் கமல் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது சுதந்தர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று தெரிவித்தார்.
இதற்கு பாஜகவினரும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்களும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்ச்சைக்குரிய வகையில் பேசியதை தொடர்ந்து நடிகர் கமல் தனது தேர்தல் பிரசாரத்தை இரண்டு நாட்களாக ரத்து செய்துள்ளார்.
தொடர் எதிர்ப்பையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகர் கமல் வீடு மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு உதவி ஆய்வாளர் தலைமையில் 5 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நாகர்கோவில் அடுத்த வடசேரியில், பாஜகவினர் மற்றும் இந்து முன்னணியினர் சேர்ந்து கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவரது உருவபொம்மையை எரித்து கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து உருவ பொம்மையை போலீசார் தண்ணீர் ஊற்றி அனைத்து அகற்றினர்.