போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி பகுதிகளில், மே பிளவர் மரங்கள் பரவலாக காணப்படுகிறது. தற்போது நிலவும் கடும் வறட்சியால், எங்கு பார்த்தாலும் செடி,கொடிகள் காய்ந்து சருகாகி வரும் நிலையில், மே பிளவர் மரங்களில் சிவப்பு நிறத்தில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இலைகளை விட பெரிய அளவில், மரம் முழுவதும் படர்ந்து காணப்படும் இந்த பூக்கள், காண்பவர் கண்களை பெரிதும் கவர்ந்திழுக்கின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சுட்டெரிக்கும் வெயிலுக்கு பகல் நேரத்தில் வெளியில் தலை காட்டவே முடியாத நிலை உள்ளது.
நண்பகல் வேளையில் அனல் காற்று வீசுவதால், சாலைகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து விட்டது. அதேவேளையில் முக்கியமான பணிகளுக்காக கட்டாயம் வெளியில் செல்ல வேண்டியுள்ளது. அவ்வாறு கொளுத்தும் வெயிலில் வெளியே செல்லும் போது, பூத்து குலுங்கும் மேபிளவர் மரங்கள் சற்று ஆறுதல் அளிக்கிறது,’ என்றனர்.