×

இடைத்தேர்தல் காரணமாக மே 19ம் தேதி நடைபெற இருந்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை : தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு மே 19ம் தேதி நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இடைத்தேர்தல் காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 17வது மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த 18ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், மே 19ம் தேதி அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேதியில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு நடைபெற இருந்தது.

இந்நிலையில் இடைத்தேர்தல் நடைபெறும் பகுதியில் உள்ள தேர்வர்கள் வாக்களிக்கும் வகையில் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வரும் 19ம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது இத்தேர்தலை கருத்தில் கொண்டும் ஒருசில நிர்வாக காரணங்களுக்காகவும், 19ம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான எழுத்து தேர்வை 25.05.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மையங்களில் வரும் 25ம் தேதி என குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : TNPCC ,examination ,by-election , Election,TNPSCMuseum officer,Lok Sabha election
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்