சென்னை: சென்னை கோயம்பேடு பேருந்து நிறுத்தம் பின்புறம் அமைந்துள்ள குடிநீர் வடிகால் வாரியத்திற்கு சொந்தமான 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட புதர் மண்டிய நிலப்பரப்பில் நேற்று மதியம் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. சிறிய அளவில் பிடித்த தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தின் காரணமாக அப்பகுதியில் வானுயர அளவு புகை எழும்பியது. இதனால் சுற்று வட்டார பகுதி முழுவதும் ஒரே புகை மூட்டமாக காணப்பட்டது. இதனால் பொதுமக்களுக்கு மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்றவை ஏற்பட்டது.
இதனால் வாகனத்தில் சென்றவர்கள் நிலை தடுமாறியும் கீழே விழுந்தும் விபத்துக்குள்ளாகினர். கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே ஏற்பட்ட தீயிணை அணைக்க அசோக் நகர், கோயம்பேடு, மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், வடபழனி, விருகம்பாக்கம், கே.கே.நகர், உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் சுமார் 45க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ முழுவதும் அணைக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் தீ விபத்து ஏற்படாத வண்ணம் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த தீ விபத்தானது ஊழியர் ஒருவர் பீடி பிடித்து அணைக்காமல் வீசியதன் காரணமாக பரவியதாக தெரிகிறது. ஆள் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அதேபோல் மரம், புல், சறுகு போன்றவை மட்டும் இப்பகுதியில் இருந்தால் பெருமளவில் பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.இந்த திடீர் தீவிபத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து கோயம்பேடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.