மபி.யில் வரும் 19ம் தேதி நான்காவது மற்றும் கடைசிக் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதனால் கட்சி தலைவர்களின் பிரசாரம் இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகின்றது. இந்நிலையில் ரத்லமில் நடந்த பாஜ கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சீக்கியர் கலவரம் தொடர்பாக பேசிய காங்கிரஸ் தலைவர் பிட்ரோடா, நடந்தது என்னவோ, நடந்துவிட்டது என்பது சாதாரண மூன்று வார்த்தைகள் கிடையாது. இது அக்கட்சியின் அகந்தையை காட்டுகின்றது. காங்கிரஸ் தலைவர்கள் நடந்தது, நடந்துவிட்டது என்கிறார்கள். ஆனால் நாட்டு மக்களோ தற்போது காங்கிரஸ் ஆட்சியை போதும், போதும் என்கின்றனர்.காங்கிரஸ் கட்சியின் நடந்தது, நடந்துவிட்டது அணுகுமுறையால்தான் மக்களுக்கு வீடு, மின்சாரம், கேஸ் இணைப்பு, கழிவறைகள் என எந்த வசதியும் கிடைக்கப்பெறவில்லை. மாநிலத்தில் வங்கிக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதியை அரசு நிறைவேற்றவில்லை. மக்கள் கடவுள் போன்றவர்கள். கடவுளை காங்கிரஸ் ஏமாற்றி விட்டது. பாரத் மாதாவுக்கு ஜே என கூறுவதில் அவர்களுக்கு பிரச்னை உண்டு. ஆனால் அதனை துன்புறுத்துவதில் அவர்களுக்கு சந்தோஷம் என்றார்.
இதேபோல் இமாச்சலப் பிரதேசத்தின் சோலன் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். அவர் பேசுகையில், “ஜாமீனில் வந்தவர்கள் உங்களது பாதுகாவலரை துஷ்பிரயோகம் செய்வதற்காக தங்களது அகராதியில் இருந்து புதிய வார்த்தைகளை தேடுகிறார்கள். ஆனால் உங்கள் பாதுகாவலர் அவர்களது வார்த்தைகளால் அசையப்போவது கிடையாது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகள் கூட்டணியின் ஒரே குறிக்கோள் மோடியை தோற்கடிக்க வேண்டும் என்பதுதான். ஆயுத கொள்முதலை, காங்கிரஸ் கட்சியினர் பணத்தை அள்ளிக் கொடுக்கும் ஏடிஎம் ஆக பயன்படுத்திக் கொண்டனர்’’ என்றார்.