×

தி.நகரில் தொடர் செல்போன் பறிப்பு சிறுவன் உட்பட 2 பேர் கைது

* 2 வியாபாரிகளும் சிக்கினர்
* 50 செல்போன்கள் பறிமுதல்

சென்னை: தி.நகர், சூளைமேடு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த சிறுவன் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், திருட்டு செல்போன்கள் வாங்கிய 2 வியாபாரிகளையும் போலீசார் கைது செய்தனர். தி.நகர், சூளைமேடு, அமைந்தகரை, ஜாம்பஜார் பகுதியில் இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களை குறிவைத்து, மர்ம நபர்கள் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வருவதாக தி.நகர் துணை கமிஷனருக்கு புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க தேனாம்பேட்டை உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

பின்னர் செல்போன் பறிப்பு சம்பவங்கள் நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பழைய குற்றவாளிகளான கண்ணகி நகரை சேர்ந்த செங்குட்டுவன் (எ) ரவி (19) என்பவர், 17 வயது சிறுவனுடன் சேர்ந்து சாலையில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் முகவரி கேட்பது போல் நடித்து தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

அதைதொடர்ந்து செங்கட்டுவன் மற்றும் 17 வயது சிறுவனை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 18 செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், திருட்டு செல்போன்களை தி.நகர் சத்யா பஜாரில் உள்ள செல்போன் கடைக்காரர்கள் ராஜா முகமது மற்றும் அரி கிருஷ்ணன் ஆகியோரிடம் ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்பனை  செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, ராஜா முகமது மற்றும் அரிகிருஷ்ணனையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : cell phone spy boy ,TN , T.Nagar, cellphone seizure, boy, arrested
× RELATED தனியார் வங்கி வசூலிப்பாளரிடம் ₹73,500 பறிமுதல்