×

விமானம் மீது லேசர் ஒளி: தனியார் ஓட்டலுக்கு போலீசார் எச்சரிக்கை

கோவை: கோவை விமானநிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்ட விமானம் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்ட விவகாரம் தொடர்பாக தனியார் ஓட்டலுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கோவை பீளமேடு விமானநிலையத்தில் இருந்து சென்னைக்கு ஏர்இந்தியா விமானம் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு புறப்பட்டது. விமானம் பறக்கும்போது, விமானத்தின் மீது திடீரென லேசர் ஒளிபட்டது.  உடனடியாக பைலட் கோவை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து சூலூர் போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.
 
 சூலூர் போலீசார் விமான நிலைய அதிகாரிகள், மத்திய பாதுகாப்பு படை அதிகாரிகள் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் லேசர் ஒளி அடித்தது தொடர்பாக விசாரித்தனர். அப்போது, ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட லேசர் ஒளி விமானத்தின் மீது பட்டது தெரியவந்தது. இதனை தொடர்ந்து தனியார் ஓட்டலுக்கு விமான நிலைய அதிகாரிகள், போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையம் அருகே இது போன்ற லேசர் ஒளியை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தினர். இந்நிலையில், கோவை விமானநிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படைவீரர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : hotel , Flight, laser light, police alert
× RELATED என் பெற்றோர்களே எனது வழிகாட்டிகள்!