பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மணிவண்ணனை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம்பெண்களை மிரட்டி ஆபாச படம் எடுத்து பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தனர். சிபிசிஐடி போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு கடந்த ஏப்ரல் 27ம் தேதி சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து டெல்லி மற்றும் சென்னையில் இருந்து வந்த சிபிஐ அதிகாரிகள் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில் தேடப்பட்டு வந்த மணிவண்ணன் கோவை நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதையடுத்து போலீசாரின் விசாரணையில் மணிவண்ணனும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனால் அவர் மீதும் பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட பெண்களிடம் சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையின் அடிப்படையில் மணிவண்ணனையும் சிபிஐ அதிகாரிகள் பாலியல் பலாத்கார வழக்கில் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை கைது செய்யவும் சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.