×

கட்சிக்காரர்கள் மீது தாக்குதல் விவகாரம் அதிமுக எம்எல்ஏ மீது கொலை முயற்சி வழக்கு பதிவு: போலீசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: கொலை முயற்சி வழக்கில் அதிமுக எம்எல்ஏ சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துமாறு கடலூர் புதுப்பேட்டை போலீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பண்ருட்டி புதுப்பேட்டையை சேர்ந்த ஆர்.சுரேஷ் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடலூர் மாவட்டம் தொரப்பாடியில்  உள்ள அதிமுக அலுவலகத்திற்கு தேர்தல் பணி தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள நான் எனது நண்பர்களுடன் சென்ேறன். அப்போது, பண்ருட்டி எம்எல்ஏ சத்யா, அவருடைய கணவர் பன்னீர்செல்வம் ஆகியோர் அடியாட்களை வைத்து என் மீதும் எனது நண்பர் மீதும்  கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.


 இந்த தாக்குதல் தொடர்பாக கடலூர் புதுப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் எனது புகார் மீது புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் வழக்கு பதிவு செய்யவில்லை. இதையடுத்து, கடலூர் எஸ்பியிடம் புகார் கொடுத்தேன். அரசியல் செல்வாக்கின் காரணமாக எம்எல்ஏ மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தோம். அதன் பின்னர் எனது புகார் மீது சிஎஸ்ஆர் பதிவு செய்யப்பட்டது. ஆனால், எப்ஐஆர் பதிவு செய்யவில்லை. இந்நிலையில், எம்எல்ஏ சத்யா மற்றும் அவருடைய கணவர் மீது அளிக்கப்பட்ட  புகாரை திரும்ப பெறுமாறு புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் எங்களை மிரட்டினார். எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் ெசய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் கே.பிரேம் ஆனந்த் ஆஜரானார். மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் கொடுத்த புகார் மீது கடலூர் புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் 4 வாரங்களுக்குள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.


Tags : AIADMK ,High Court , Participants, Attack, Case Registration, High Court Order
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...