×

வெளிநாட்டுக் கடன்களை சமாளிக்க பாகிஸ்தானுக்கு நிதியுதவி: 6 பில்லியன் டாலர் வழங்கவுள்ளது ஐஎம்எஃப்

இஸ்லமாபாத்: வெளிநாட்டுக் கடன் சுமைகளை சமாளிக்க பாகிஸ்தான் நாட்டிற்கு அடுத்த 3 ஆண்டுகளில் 6 பில்லியன் டாலர் தொகையை ஐஎம்எஃப் வழங்க உள்ளது. பாகிஸ்தானின் வெளிநாட்டுக் கடன்கள் 90 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும், ஏற்றுமதியின் அளவு கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து சுருங்கி வருவதாகவும் அந்நாட்டு நிதி ஆலோசகர் அப்துல் ஹஃபீஸ் ஷேக் கூறியுள்ளார். ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையேயான வர்த்தகப் பற்றாக்குறையின் அளவு 20 பில்லியன் டாலர்களை எட்டியிருப்பதாகவும், கடந்த 2 ஆண்டுகளில் அந்நியச் செலாவணி கையிருப்பு 50 சதவீதம் குறைந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, வெளிநாட்டுக் கடன் பொறுப்பு தொடர்பாக ஆண்டுதோறும் செலுத்த வேண்டிய தொகையின் அளவில் 12 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பற்றாக்குறை ஏற்படுவதாக பாகிஸ்தான் நிதி ஆலோசகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அடுத்த 3 ஆண்டுகளில் ஐஎம்எஃப்பிடம் இருந்து 6 பில்லியன் டாலர்களையும், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 2 முதல் 3 பில்லியன் டாலர்கள் தொகையையும் பாகிஸ்தான் பெற உள்ளதாக அப்துல் ஹஃபீஸ் ஷேக் கூறியுள்ளார்.

ஐஎம்எஃப்:

189 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஐஎம்எஃப் நிலையான பண பரிவர்தனை, சர்வதேச வணிகம், நிலையான வேலைவாய்ப்பு வழங்குதல், வறுமையை ஒழித்தல் போன்ற கோட்பாடுகளுடன் இயங்கி வருகிறது. 1945-ம் ஆண்டு ஆரம்பிக்க பட்ட இந்த அமைப்பு சர்வதேச அளவில் உறுப்பினர் நாடுகள் சுமூகமான முறையில் பண பரிவர்த்தனை செய்ய உதவி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Pakistan ,IMF , Foreign debt, Pakistan, sponsorship, $ 6 billion, IMF
× RELATED தேர்தல் ஆதாயத்திற்காக வெறுப்பாக பேசுவதா? பாகிஸ்தான் கண்டனம்