×

மகளின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்து கொலை செய்த தந்தை: அரியலூர் அருகே அதிர்ச்சி சம்பவம்!

அரியலூர்: அரியலூர் அருகே மகளின் தற்கொலைக்கு காரணமானவரை கழுத்தறுத்து கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள இலைக்கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் குமரவேல். அரசு பேருந்து ஓட்டுனரான இவர், விருத்தாசலம் அருகே புதுக்குப்பம் பகுதியில் வசித்து வந்தார். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து நிலையில், இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மனைவி இறந்த பின்னர் அப்பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான ஏழுமலையின் மகள் ஆனந்தவள்ளிக்கும், குமரவேலுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியது.

இதையடுத்து இருவரும் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த 18.9.18 அன்று குமரவேலும் ஆனந்தவள்ளியும் இலைக்கடம்பூர் கிராமத்தில் உள்ள வீட்டிற்கு சென்றனர். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், ஆனந்தவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஏழுமலை, மகளின் தற்கொலைக்கு காரணமான குமரவேலை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். இதையடுத்து, நேற்றிரவு விருத்தாச்சலத்தில் குமரவேலுவை சந்தித்த ஏழுமலை, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அவரை மது அருந்த அழைத்து சென்றுள்ளார். குமரவேலுக்கு போதை தலைக்கேறியதும் ஆத்திரதத்தில் இருந்த ஏழுமலை, தான் கொண்டு வந்த கத்தியால் குமரவேல் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து விருத்தாச்சலத்தில் போலீசார் மறித்து வாகன சோதனை செய்தபோது ஆட்டோவில் உள்ள ரத்தக்கறையை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். ஏழுமலையிடம் விசாரித்த போது அவர் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும், செந்துறை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குமரவேலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Tags : suicide ,incident ,Ariyalur , Daughter, suicide, murder, father, arrested, Ariyalur
× RELATED “அரியலூர் மாவட்டத்தில் சுற்றிய...