×

ஃபானி புயல்..... பலி எண்ணிக்கை 64 ஆக அதிகரிப்பு: அடிப்படை வசதிகளின்றி மக்கள் அவதி

புவனேஸ்வர்: ஃபானி புயல் பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை பூரியில் 39, கென்றபடவில் 3, மயூரபஞ் 4, ஜாஜ்பூர் 3, கட்டாக் 6, கோர்தாவில் 9 பேர் என மொத்தம் 64 பேர் பலியாகியுள்ளனர். வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஃபானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. ஃபானி புயலால், ஒடிசாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. அதேபோல், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், மாநில அரசு ரூ.1,600 கோடி அறிவித்துள்ளது. இருப்பினும், புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம் இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.


Tags : storm ,Fanny ,deaths ,facilities , Odisha, Cyclone Fani,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...