தமிழகத்தில் புற்றீசலாய் பெருகும் சிபிஎஸ்இ பள்ளிகள் - கடுமையான கெடுபிடிகளுடன் நீட் தேர்வு - வட மாநிலத்தவர் அதிக அளவில் நியமனம்...இந்த மூன்றுக்கும் தொடர்பு உள்ளது தெரியுமா? மாநில கல்வித்தரம் அடியோடு சரியில்லை என்று ஊடுருவிய சிபிஎஸ்இ பள்ளிகள், இன்று தெருவுக்கு தெரு பெட்டிக்கடை போல பரவி விட்டன. சிபிஎஸ்இ பள்ளியில் படித்தால் தான் நீட் தேர்வு எழுத முடியும் என்றும் திட்டமிட்ட தவறான பிரசாரம் செய்யப்படுகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் என்று வயிற்றை கட்டி, வாயை கட்டி பணம் சேமிக்கும் பெற்றோர் தவியாய் தவிக்கின்றனர்.
இவர்களின் வேதனையை, கவலைகளை, கோரிக்கைகளை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, தனியார் சிபிஎஸ்இ பள்ளிகள் ‘கடைவிரிக்க’வைத்து கொண்டிருக்கிறது தமிழக அதிமுக அரசு. கல்வி பற்றியோ, கல்விக்கட்டணம் பற்றியோ மாநில அரசுக்கு கவலை இல்லை. அவர்கள் குறிக்கோள் எல்லாம் தனியார் பள்ளிகளிடம் கல்லா கட்டுவது தான் என்று பெற்றோர்கள் தரப்பில் குமுறலுடன் சொல்வதை கேட்க முடிகிறது. இதன் விளைவு, கல்வித்தரம் கொள்ளை போய் விட்டது; நம் பாரம்பரிய கல்வியை, தமிழ் வழி கல்வியை நம்பினால் அவ்வளவு தான் என்ற அளவுக்கு சிபிஎஸ்இ பள்ளிகள் மோகம் அதிகரித்து வருகிறது. இதை திட்டமிட்டு சிலர் நடத்தி வருகின்றனர். அதற்கு மாநில அரசும் கண்டும் காணாமல் துணை போகிறது.
இது இப்படி என்றால், தென்னகத்தில் தான், அதிலும் தமிழகத்தில் தான் அதிக கெடுபிடிகள்; சமீப ஆண்டுகளாய் ஐஏஎஸ், ஐபிஎஸ் பதவிகளுக்கு முக்கியமான சிவில் தேர்வுகளில் பெரும்பாலும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான் அதிக அளவில் தேர்வு பெறுகின்றனர். வட மாநிலங்களில் நீட் உட்பட எந்த தேர்விலும் இவ்வளவு கெடுபிடிகள் இல்லை. பிட் அடிப்பதெல்லாம் பீகார் போன்ற மாநிலங்களில் மிகப்பெரிய வியாபாரம். நீட் தேர்வுக்கும் வட மாநிலங்களில் எந்த கெடுபிடிகளும் இல்லை. கல்வித்தரத்தில் எங்கே போகிறது தமிழகம்? இதோ நான்கு கோணங்களில் அலசுகின்றனர்.