×

லஷ்கர் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

ஸ்ரீ நகர்: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹிந்த் சிதாபூர் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, நேற்று காலை அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். பதிலுக்கு பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

என்கவுன்டர் நடந்த இடத்தில் இருந்து 2 தீவிரவாதிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட தீவிரவாதிகள் ரெட்வானி குல்காமை சேர்ந்த ஜாவித் அகமத் பாட், வாரிபோராவை சேர்ந்த அதில் பஷீர் வானி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இருவரும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதி ஜாவித் அகமத் பாட் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.

அந்த பகுதியில் திட்டமிட்டு தொடர்ந்து தீவிரவாத தாக்குல்களை நிகழ்த்தியது மற்றும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தது உள்ளிட்ட தீவிரவாத குற்றங்களில் ஈடுபட்டுள்ளான். இதேபோல், வானியும் பல்வேறு தீவிரவாத குற்ற சம்பவங்களில் தொடர்புள்ளவன் என்று கூறப்படுகின்றது. சண்டை நடந்த இடத்தில் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Tags : Lashkar ,terrorists , Lashkar radicals, 2 people, shot dead
× RELATED ஒன்றிய அமைச்சருக்கு லஷ்கர் கொலை மிரட்டல்