பெங்களூரு, மே.13: போலி கடிதத்தை பயன்படுத்தி தனியார் விளம்பர நிறுவனத்தை மோசடி செய்ததாக கூறப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகும்படி நடிகர் ரஜினிகாந்த் மனைவிக்கு பெங்களூரு அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். கடந்த 2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் திரைப்படம் வெளியானது. கர்நாடகத்தில் பிரபல தனியார் விளம்பர நிறுவனம் ஒன்று இதை வாங்கி விளம்பரம் செய்தது. ஆனால், படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை.
இதனால், அதிருப்தியடைந்த வினியோகஸ்தர்கள் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம், நஷ்டத்தை ஈடுகட்ட வேண்டுமென்று கேட்டுக் கொண்டது. இது தொடர்பாக நீதிமன்றத்திலும் முறையிடப்பட்டதாக கூறப்படுகிறது.அப்போது, ரஜினிகாந்த் குடும்பம் தரப்பில் அவரது மனைவி, நீதிமன்றம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனத்திற்கு கடிதம் மூலம் விளக்கம் அளித்தார். அதில் தங்களுக்கும் இந்த படத்தின் மூலம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் நஷ்ட ஈடு கொடுக்க முடியாது என்றும் கூறப்பட்டிருந்தது.
இதை ஏற்க மறுத்த தனியார் விளம்பர நிறுவனம், லதா கொடுத்த கடிதத்தை பரிசீலனை செய்தது. அதில் லதா வழங்கிய கடிதம் போலியானது என்று தெரியவந்தது. இதை விளம்பர நிறுவனம் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தது. நீதிமன்றம் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி அல்சூர் கேட் போலீசில் லதாவிற்கு எதிராக மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே ஒருமுறை லதா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அல்சூர் கேட் போலீசார் சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால், லதா தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. இந்நிலையில், 2வது முறையாக சில தினங்களுக்கு முன்பு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டது. அதில் விளம்பர நிறுவனம் கொடுத்த புகாருக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. இதை ஏற்றுக் கொண்ட லதா தரப்பு மே 20ல் ஆஜராவதாக கூறியுள்ளது.