×

பிரிட்டன் நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை வெளியிட்டது சண்டே டைம்ஸ் பத்திரிகை

பிரிட்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த சண்டே டைம்ஸ் பத்திரிகை அந்நாட்டின் பிரபல பெரும்செல்வந்தர்கள் பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டுக்கான இந்த பட்டியலில் இந்தியாவில் பிறந்து தற்போது லண்டன் நகரில் வசித்தவாறு பல்வேறு தொழில்கள் மற்றும் வர்த்தகங்களை செய்துவரும் ஸ்ரீசந்த் இந்துஜா(78) மற்றும் கோபிசந்த் இந்துஜா(82) சகோதரர்கள் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள சொத்துகளுடன் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளனர். இவர்களின் மேலும் இரு சகோதரர்களான பிரகாஷ் இந்துஜா(72) மற்றும் அசோக் இந்துஜா(67) ஆகியோர் லண்டன் மற்றும் மும்பையில் உள்ள தொழில் நிறுவனங்களை நிர்வகித்து வருகின்றனர். பெட்ரோலிய உற்பத்தி, எரிவாயு, தகவல் தொடர்புத்துறை, ஊடகங்கள், வங்கிதுறை, ரியல் எஸ்டேட் மற்றும் மருந்து உற்பத்தி துறைகளில் இந்துஜா குமுமம் முதலீடு செய்து தொழில் நடத்தி வருகிறது. இந்தியாவில் இவர்களுக்கு சொந்தமாக உள்ள அசோக் லேலண்ட் வாகன உற்பத்தி நிறுவனம் மற்றும் இன்டஸ்இன்ட் வங்கியின் பங்குகள் சமீபகாலமாக நல்ல வளர்ச்சியுடன் கைமாறி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆண்டு வருமானம், நிலங்கள் உள்ளிட்ட சொத்துகளின் மதிப்பு, இதர நிறுவனங்களின் பங்கு பத்திரங்களின் கையிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பிரட்டன் நாட்டில் உள்ள ஆயிரம் செல்வந்தர்களை இந்த பத்திரிகை ஆண்டுதோறும் பட்டியலிட்டு வருகிறது. இவர்களுக்கு அடுத்தபடியாக கம்பளம் மட்டும் உலோக விற்பனையில் கொடிகட்டி பறக்கும் டேவிட் ரெயூபென் - சைமன் ரெயூபென் சகோதரர்கள் சுமார் 18.664 பில்லியன் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர். 2018-ம் ஆண்டுக்கான இதே பட்டியலில் 21.05 பில்லியன்பவுண்டுகள் மதிப்புள்ள சொத்து மதிப்புடன் முதலிடத்தை பிடித்திருந்த பிரபல ரசயான தொழிலதிபர் ஜிம் ராட்கிளிப் தற்போது மூன்றாவது இடத்தில் பின்தங்கியுள்ளார். உலகில் உற்பத்தியாகும் 4 கார்களில் ஒன்றுக்கு தேவையான இரும்பை சப்ளை செய்யும் பிரபல தொழிலதிபர் லக்‌ஷ்மி மிட்டல்(67) கடந்த ஆண்டு இந்த பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்திருந்தார். இந்த ஆண்டு 14.66 பில்லியன் பவுண்டுகள் சொத்து மதிப்புடன் ஐந்தாவது இடத்தில் இவர் பின்தங்கியுள்ளார்.

Tags : newspaper ,The Sunday Times ,celebrities ,UK , Sunday Times, newspaper,published , UK-based ,celebrities
× RELATED விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி: குவியும்...