வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்த 12ம் வகுப்பு மாணவி தீயணைப்பு துறையினரால் பத்திரமாக மீட்கப்பட்டார். காட்பாடி அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த ஜனனி என்ற மாணவி, அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பை முடித்து விட்டு, தற்போது விடுமுறையில் உள்ளார். அவர் இன்று காலை அவர்களுக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக, அவரது தந்தை சிதம்பரத்துடன் சென்றுள்ளார்.
அப்போது அவர்களுக்கு சொந்தமான 72 அடி ஆழம் கொண்ட சுற்றுசுவர் இல்லாத பழைய கிணற்றில் மாணவி ஜனனி கால் தவறி விழுந்துள்ளார். பின்னர் அவரது தந்தை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் இறங்கி மாணவியை உயிருடன் மீட்டனர். கிணற்றில் நான்கு அடி அளவிற்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால் மாணவி ஜனனிக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்பு அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார்.