பொள்ளாச்சி : பொள்ளாச்சிஅருகே உள்ள ஆழியார் அணை மற்றும் அணை பகுதியில் உள்ள பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் வந்து செல்கின்றனர். பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஆழியார் பூங்கா பகுதியில் விடுமுறையை மகிழ்ச்சியாக கழித்து சென்றனர்.
இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். தற்போது ஆழியார் அணையின் நீர்மட்டம் குறைவாக இருந்ததால் கோட்டூர் பேரூராட்சி சார்பில் ஒரு படகு மட்டுமே இயக்கப்பட்டது. படகு சவாரியின் போது பயணிகளின் பாதுகாப்பு கருதி லைப் ஜாக்கெட் வழங்கப்படுகிறது. இதில் பெரும்பாலான உயிர் காக்கும் லைப் ஜாக்கெட் சேதமடைந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே இந்த லைவ் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை முறையாக சீரமைத்து வழங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.