புதுச்சேரி: ``மக்களுக்கு எதிரான ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் அனுமதிக்க மாட்டோம்’’ என்று முதல்வர் நாராயணசாமி திட்டவட்டமாக கூறினார். புதுச்சேரி, விழுப்புரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு செய்ய வேதாந்தா குழுமத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து முதல்வர் நாராயணசாமி நிருபர்களி டம் நேற்று கூறியதாவது: தமிழகத்தில் விழுப்புரம் பகுதியிலும், புதுச்சேரியிலும் எரிவாயு எடுக்க ஆய்வு பணிகளை மேற்கொள்ள (ஹைட்ரோ கார்பன் திட்டம்) மத்திய அரசு அனுமதி கொடுத்ததாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் காரைக்கால் பகுதி திருநள்ளாறில் எரிவாயு ஆய்வுக்கு அனுமதி கொடுக்கப்ேபாவதாக மத்திய அரசிடமிருந்து எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி புதுச்சேரியில் எரிவாயு சம்பந்தமாக மத்திய அரசு எந்த நடவடிக்கை எடுத்தாலும், அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று அவர்களுக்கு பதில் அனுப்பியது மட்டுமல்லாமல் சட்டமன்றத்தில் விவாதம் வந்தபோது, இதுசம்பந்தமாக விளக்கமாக பதில் அளித்துள்ளேன். அப்போது புதுச்சேரிக்கு மத்திய அரசு எந்த அனுமதியும் கொடுக்காது என கூறி இருக்கிறேன்.தற்போது எரிவாயு அகழ்வாராய்ச்சி செய்யப்போவதாக தகவல் வந்து கொண்டிருக்கிறது. இதுசம்பந்தமாக அதிகாரப்பூர்வமாக கடிதம் எதுவும் வரவில்லை. அப்படி இருந்தாலும்கூட புதுச்சேரியில் நாங்கள் அனுமதி அளிக்க மாட்டோம். மத்திய அரசின் அதிகாரப்பூர்வமாக கடிதம் வந்தால் அதை திருப்பி அனுப்பி இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என அவர்களுக்கு நான் பதில் அளிப்பேன். இவ்வாறு நாராயணசாமி கூறினார்.மக்கள் தடுத்து நிறுத்துவார்கள்: புதுக்கோட்டையில் தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ``ஹைட்ரோ கார்பன் எடுக்க அனுமதி வழங்கினாலும் மக்கள் அதனை தடுத்து நிறுத்துவார்கள். காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மத்திய அரசு, கர்நாடக அரசு முழுமையாக செயல்படுத்தவில்லை. இதை எடப்பாடி அரசு கண்டுகொள்ளவும் இல்லை. மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்’’ என்றார்.