சென்னை: அரசு குடியிருப்பை காலி செய்ய வேண்டும் என மூத்த அரசியல்வாதி நல்லகண்ணுவுக்கு தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்துறை நோட்டீஸ் விட்டதைத் தொடர்ந்து, எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் கோரிக்கையையும் முன்வைக்காமல் வெளியேறினார்.சென்னை தியாகராய நகரில் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், அரசியல்வாதியுமான நல்லகண்ணுவுக்கு (94) அரசு சார்பில் குடியிருக்க கடந்த 2007ம் ஆண்டு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி குடியிருந்து வந்த அவர் இலவசமாக அரசு கொடுத்தாலும் கூட, அதை ஏற்காமல் வாடகை கொடுத்துதான் 12 ஆண்டுகளாக குடியிருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் திடீரென்று அந்த கட்டிடத்தில் புதிய திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதனால் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்றும் நல்லகண்ணு உள்பட அனைத்து குடியிருப்புவாசிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரசு நோட்டீஸ் கொடுத்ததை அடுத்து மற்ற குடியிருப்புவாசிகள் வெளியேறினர். அதேபோல அரசிடம் மாற்று வீடு கேட்காமல் எந்தவிதமான எதிர்ப்பும் தெரிவிக்காமல் நல்லகண்ணுவும் வெளியேறினார். அங்கிருந்து வெளியேறிய அவர் கே.கே நகரில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இதே போல தியாகி கக்கனின் மகனுக்கும் அரசு வீட்டிலிருந்து வெளியேற நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.அரசின் இந்த செயலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.