நியூயார்க்: இந்திய வம்சாவளியை சேர்ந்த மருத்துவர் பவன் குமார் ஜெயின் (66). இவர், அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் அறுவை சிகிச்சை செய்யும் நபர்களுக்கு அத்தியாவசிய சோதனைகள் எதையும் மேற்கொள்ளாமல், போதை மருந்தை வலி நிவாரணியாக பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்துள்ளார். இதையடுத்து, மருத்துவ மோசடியிலும் ஈடுபட்டதாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. இவரது சிகிச்சையில் 2009ல் நோயாளி ஒருவர் மூச்சு திணறி இறந்தார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய நியூ மெக்சிகோ மருத்துவ கழகம், கடந்த 2012ம் ஆண்டு ஜூன் மாதம் பவன் குமாரின் மருத்துவ லைசன்சை தற்காலிகமாக ரத்து செய்தது. இது தொடர்பான வழக்கு விசாரணை லாஸ் குரூசில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் அவர் மருத்துவ மோசடியில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அவருக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.