×

சீக்கியர் படுகொலை விவகாரம் பிட்ரோடா மன்னிப்பு கேட்க ராகுல்காந்தி அதிரடி உத்தரவு

‘கடந்த 1984ம் ஆண்டு சீக்கியர் படுகொலை குறித்து சாம் பிட்ரோடாவின் கருத்து ஏற்க முடியாதது; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நானாவதி கமிஷன், 1984ம் ஆண்டு சீக்கிய கலவரத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த ராஜிவ் காந்திக்கும் தொடர்பு இருப்பதாக கூறியிருந்தது. இதைச் சுட்டிக்காட்டி, காங்கிரஸ் கட்சியை பாஜ விமர்சித்து வருகிறது. சீக்கியர்  படுகொலை பற்றிய கேள்விக்கு ‘‘அது 1984ல் நடந்தது. அதற்கு என்ன?” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடா கேட்டிருந்தார். இதுகுறித்து விமர்சித்த மோடி, “காங்கிரஸ் கட்சியை நடத்துபவர்களின் ஆணவம்  எப்படி இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் மூலம் புரிந்து கொள்ளலாம்’’ என சாடினார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்துள்ளார். அதில், “சாம் பிட்ரோடாவின் கருத்து ஒரு நாளும் ஏற்றுக் கொள்ள முடியாதது. இதை அவரிடம்  நான் நேரடியாகவும் தெரிவிப்பேன். தனது கருத்துகளுக்காக பிட்ரோடா மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த கலவரத்துக்கு யார் பொறுப்பாக இருந்தாலும் அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுக்கப்பட வேண்டும். இந்த  விவகாரம் குறித்து முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், என்னுடைய தாய் சோனியா காந்தி, நான் உட்பட அனைவரும் விளக்கம் அளித்து விட்டோம். சீக்கிய கலவரம் மிக மோசமான நிகழ்வு’’ என தெரிவித்துள்ளார்.

பைலட்டுக்கு உதவிய ராகுல்
ஹெலிகாப்டர் கதவில் ஏற்பட்ட பிரச்னையை சரி செய்ய பைலட்டுக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உதவி செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. ஹெலிகாப்டரில் கதவில் உள்ள ரப்பரை, சரியாக  பொருத்தும் பணியில் ஹெலிகாப்டர் பைலட் ஈடுபடுகிறார். பைலட்டுக்கு ராகுல் காந்தியும் உதவி புரிகிறார். ராகுல் காந்தியின் உடன் வந்த குழுவில் உள்ள ஒருவர் பேஸ்புக்கில் இதை நேரலையாக ஒளிபரப்பு செய்தார். தனது  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தியும், ஹெலிகாப்டரை சீர் செய்யும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.


Tags : Rahul Gandhi ,Pitroda ,assassination ,Sikh , Sikhs , Pitroda ,apologizes, Rahulkanthi ,order
× RELATED சொல்லிட்டாங்க…