×

ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி 1 கோடி பறிப்பு: ஆசாமிகளுக்கு வலை

சென்னை: ரியல் எஸ்டேட் அதிபரை மிரட்டி ₹1 கோடி பறித்து கொண்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். கொரட்டூரை சேர்ந்தவர் முகமது தாஹிர் (48), ரியல் எஸ்டேட் அதிபர். போரூர் அருகே உள்ள 110 ஏக்கர் புறம்போக்கு நிலத்துக்கு பட்டா வாங்கி தரும்படி சிலர், முகமது தாஹிரிடம் தெரிவித்துள்ளனர். இதற்காக, ஒரு தொகையை  அவரிடம் கொடுத்துள்ளனர். ஆனால், அதன்படி, முகமது தாஹிர் பட்டா வாங்கித் தரவில்லை என தெரிகிறது.இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த துரைப்பாக்கத்தில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வருமாறு முகமது தாஹிரை, பணம் கொடுத்தவர்கள் அழைத்தனர். அதன்படி, அவரும் அந்த ஓட்டலுக்கு வந்தார். அப்போது, கொடுத்த பணத்தை  திருப்பி தரும்படி கேட்டுள்ளனர்.

ஆனால் முகமது தாஹிர், தன்னிடம் பணம் இல்லை என கூறியுள்ளார். இதனால், அவரை ஒரு அறையில் அடைத்து சரமாரியாக தாக்கினர். பின்னர் தாஹிரின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு ₹1 கோடி  கொடுத்தால் உனது கணவனை விடுகிறோம். இல்லையென்றால் கொன்று விடுவோம், என மிரட்டியுள்ளனர். பதறிப்போன அவர், ₹1 கோடியை கொண்டு வந்து அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து, தாஹிரை விடுவித்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இதுதொடர்பாக தாஹிர் துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பிய கும்பலை தேடி வருகின்றனர்.

Tags : Real estate magnate , Real estate ,principa, 1 Crore, Assamese
× RELATED ரியல் எஸ்டேட் அதிபர் தற்கொலை விவகாரம்...