சவுத்தாம்ப்டன்: பாகிஸ்தான் அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில், ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தால் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது. ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீசியது. இங்கிலாந்து தொடக்க வீரர்களாக ஜேசன் ராய், ஜானி பேர்ஸ்டோ களமிறங்கினர். சிறப்பாக விளையாடி அரை சதம் அடித்த இருவரும் முதல் விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்தனர். பேர்ஸ்டோ 51 ரன் (45 பந்து, 6 பவுண்டரி), ராய் 87 ரன் (98 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து வெளியேற, ஜோ ரூட் 40 ரன்னில் (54 பந்து, 3 பவுண்டரி) பெவிலியன் திரும்பினார்.
கேப்டன் இயான் மோர்கன் - ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்தது. இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்தது. மோர்கன் 71 ரன் (48 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), பட்லர் 110 ரன்னுடன் (55 பந்து, 6 பவுண்டரி, 9 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து 50 ஓவரில் 374 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.