×

தேர்தல் முடிந்த நிலையில் விழுப்புரம், புதுச்சேரியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு அனுமதி

* வேதாந்தா, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம்
* வாக்குறுதியை மீறிவிட்டதாக விவசாயிகள் கடும் எதிர்ப்பு

புதுடெல்லி: விழுப்புரம், புதுவையில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமல்படுத்தும் வகையில், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி ஆகிய நிறுவனங்களின் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. தேர்தல் முடிந்த நிலையில் மத்திய அரசு திடீரென்று அனுமதி வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகே அனுமதி அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய அரசால் புதிய எண்ணெய் எடுப்புக் கொள்கை 2016ல் அறிமுகப்படுத்தப்பட்டு, ஒற்றை அனுமதி என்கிற முறையில் கச்சா எண்ணெய் அனுமதியுடன் மீத்தேன், ஷெல் (பாறையிடுக்கு எரிவாயு), டைட் காஸ் உள்ளிட்ட பல வகையான எண்ணெய் மற்றும் எரிபொருட்களையும் எடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது. சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. 2018 ஆகஸ்ட் 1ல் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கடந்த 2016க்கும் முந்தைய கச்சா எண்ணெய் எடுக்கக் கூடிய இடங்களுக்கும் இந்த ஒற்றை அனுமதி முறை மூலம் விரிவுபடுத்தப்பட்டது. தமிழகத்தைப் பொறுத்தவரை நில வளத்தையும், நீர்வளத்தையும் பாதிக்கக் கூடிய மரபுசாராத் திட்டங்களாகிய மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களுக்கு கடந்த 2013ல் இடைக்கால தடையும், 2015ல் நிரந்தர தடையும் அமலில் இருக்கும் நிலையில், திறந்தவெளி அனுமதி முறையில் முதல் சுற்றில் தரைப்பகுதியில் கடலூர் மாவட்டம் தியாகவள்ளியிலிருந்து நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் வரையுள்ள நிலப்பரப்பில் 731 சதுர கி.மீ. ஓ.என்.ஜி.சி நிறுவனத்திற்கும் மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் குள்ளஞ்சாவடி வரை 1,794 சதுர கி.மீ., பரங்கிப்பேட்டை முதல் நாகை மாவட்டம் புஷ்பவனம் வரை 2,674 சதுர கி.மீ., பகுதியை வேதாந்தா நிறுவனத்திற்கும் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்து.

இந்த நிலையில், மேற்கண்ட நிறுவனங்கள் சுற்றுச்சூழல் அனுமதிக்கு 14.3.2019 மற்றும் 5.4.2019ம் தேதிகளில் மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் விண்ணப்பித்தன. மேலும், திருவாரூர், நாகை மாவட்டங்களை உள்ளடக்கிய பெரியகுடி மற்றும் கடலூர் மாவட்டம் புவனகிரி எண்ணெய் வட்டாரங்களில் டைட் கேஸ் எனப்படும் மரபுசாரா எண்ணெய் எடுப்பு முறைக்கு பிப்ரவரியில் சுற்றுச் சூழல் அனுமதிக்காக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
அதேபோல் டெல்டா பகுதிகளில் ‘ஹைட்ரோ ப்ராக்தரிங்’ முறையில் மேற்கண்ட வாயு எடுக்கும் நடைமுறைக்கு அமெரிக்காவின் ப்ளேட் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் இரு திட்டங்களுக்கான விண்ணப்பத்தை ஏற்றுக்கொண்ட மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்த அறிவுறுத்தியும், சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை, சுற்றுச் சூழல் மேலாண்மை அறிக்கை தயாரிப்பு உள்ளிட்ட 32க்கும் மேற்பட்ட நிபந்தனைகளை விதித்து கடிதம் அனுப்பியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த சில நாட்களில், விழுப்புரம், புதுவை பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு ஓ.என்.ஜி.சி., வேதாந்தா நிறுவனத்திற்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் அனுமதி வழங்கும் வகையில் கடிதம் அனுப்பட்டுள்ளது.

இதனால், வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி நிறுவனங்களுக்கு மத்திய மாநில அரசுகள் மறைமுகமாக இருந்து ெசயல்படுவது உறுதியாகி உள்ளது. தற்போதைய கடிதத்தின்படி, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கடிதம் நடைமுறைப்படுத்தும்போது, எண்ணெய் நிறுவனங்களே எண்ணெய் வட்டாரங்களைத் தேர்வு செய்ய முடியும். லாபத்தில் பங்கு என்கிற நடைமுறையை மாற்றி, வருமானத்தில் பங்கு என்கிற புதிய நடை முறையையும் கொண்டதாக இந்த ஒற்றை அனுமதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைச்சகத்தால் குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகள், நிலப்பரப்பு பகுதியில் எண்ணெய் கிணறு அமைப்பதற்கான நிபந்தனைகளோ விதிமுறைகளோ ஏதும் இல்லை. மாறாக கடல் பகுதி குறித்த விதிமுறைகள் மட்டுமே விதித்திருப்பதால் மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது. ஆளும் அதிமுக அரசு,  டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை பாதுகாப்போம்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்ப்போம் என தேர்தல் அறிக்கையில்  தெரிவித்திருந்தது. தேர்தல் நடைமுறைகள் இன்னும் முடியாத நிலையில், மத்திய சுற்றுச்சூழல் துறை இப்போது ைஹட்ரோ  கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் கடிதம் அனுப்பி இருப்பது தமிழக மக்களுக்கு   மத்திய மாநில அரசுகள் செய்யும் துரோகம் என்றும், இது தேர்தல்  விதிமுறைகளுக்கு முரணானது என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டி  உள்ளனர். ஆனால், தமிழகத்தில் பாஜ கூட்டணியில் உள்ள அதிமுக, பாமக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் இது தொடர்பாக ஆலோசனை நடத்திய பிறகே இந்த அனுமதியை வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கிணறு அமையும் ஊர்கள்
* திருவாரூர் மாவட்டம்: திருக்களர், ராயநல்லூர், நாலாம்சேத்தி, சேரன்குளம் நெம்மேலி, கருக்கங்குடி, கர்ணாவூர், அரிச்சபுரம், கூத்தாநல்லூர், பூதமங்கலம்,  மேலராதாநல்லூர், வெங்காரம்பேரையூர், கமலாபுரம், கீழகொத்தங்குடி, புலிவலம், வெங்கடேசபுரம்

* நாகை  மாவட்டம்: அலிவலம், அத்திப்புலியூர், கூத்தூர், கீழ்வேளூர் பட்டமங்கலம், வெண்மணி, ஆந்தக்குடி, பெரியகுடி வட்டாரம்.

* கடலூர் மாவட்டம்: சியாப்பாடி,  புத்தராயன்பேட்டை, வடஹரிராஜபுரம், வேதராயன் திட்டு, தலைக்குளம், குலக்குடி, புவனகிரி, சிதம்பரம் பசிமுத்தான் ஓடை, வெள்ளியக்குடி உள்ளிட்ட புவனகிரி வட்டாரம்.

மேற்கண்ட டைட் காஸ் எனப்படும் இறுக்கமான பகுதிகளில் உள்ள வாயுக்களை ஹைட்ரோ ப்ராக்கிங் முறையில் எடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக வேதாந்தா நிறுவனத்திற்கு ஹைட்ரோ கார்பன் எடுத்து ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.

Tags : Puducherry , Villupuram, Puducherry at the end of the election Allow Hydrocarbon Project
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் புதுச்சேரி...