சென்னை: தேசிய அளவில் ஃபிஸ்ட் பால் கிளப்களுக்கு இடையிலான போட்டியின் பெண்கள் பிரிவில் காஞ்சி ஸ்டோர்ம்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. சென்னை தாம்பரத்தில் அகில இந்திய அளவிலான நேஷனல் ரேங்கிங் ஃபிஸ்ட் பால் சாம்பியன் போட்டி நடைபெற்றது. ஃபிஸ்ட் பால் கிளப்புகளுக்கு இடையிலான இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளாக நடைபெற்ற போட்டியில் பெண்கள் பிரிவில் அதிக வெற்றிகளைக் குவித்த காஞ்சி ஸ்டோர்ம்ஸ் முதல் இடத்தை பிடித்தது. வெற்றிகளின் அடிப்படையில் காஞ்சி ஸ்டோர்ம்ஸ், வெஸ்ட் பெங்கால் கிளப், புதுச்சேரி கிரஷர்ஸ், சென்னை லயன்ஸ் அணிகள் முதல் 4 இடங்களை கைப்பற்றின.
ஆண்கள் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்ற தெலங்கானா ரைசர்ஸ் அணி முதல் இடத்தை பிடித்தது. இந்த அணி சென்னை லயன்ஸ் அணியிடம் 11-4, 11-6 என்ற நேர் செட்களில் தோற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றிகளின் அடிப்படையில் முதல் 4 இடங்களை தெலங்கானா ரைசர்ஸ், சென்னை லயன்ஸ், நாமக்கல் ஏரோஸ், யுனைடட் ஸ்போர்ட் கிளப் அணிகள் பிடித்தன. நிறைவு விழாவில் போதைபொருட்கள் புலனாய்வுப் பிரிவு எஸ்பி ஆனி விஜயா வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் ஃபிஸ்ட் பால் சங்கத்தின் நிர்வாகிகள் பாலவினாயகம், அழகேசன், சாகுல் அமீது ஆகியோர் பங்கேற்றனர்.