ஊட்டி : இம்முறை காய்கறி கண்காட்சி ரத்து செய்யப்பட்ட போதிலும், கோத்தகிரி நேரு பூங்கா ரம்மியமாக காட்சியளிப்பதால் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். ஆண்டு தோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். நீலகிரி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, காய்கறி கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி போன்றவைகள் நடத்தப்படுவது வழக்கம்.
இதில், ஆண்டு தோறும் கோத்தகிரியில் உள்ள நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சி நடத்தப்படுகிறது. இந்த காய்கறி கண்காட்சியுடனே கோடை விழா துவங்கும். இம்முறை மக்களவை தேர்தல் நடந்த நிலையில், காய்கறி கண்காட்சி உட்பட சில நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. எனினும், இப்பூங்கா வழக்கம் போல் பொலிவு படுத்தப்பட்டு அழகாக காட்சிளிக்கிறது.
கோத்தகிரி வழியாக சமவெளி பகுதிகளுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் பலரும் இந்த பூங்காவை சென்று பார்வையிட்டு செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்கள் பலரும் மாலை நேரங்களில் இங்கு சென்று பொழுது போக்குகின்றனர்.