மன்னார்குடி: பொன்மலை, போத்தனூர் ரயில்வே தொழிற்சாலை அப்ரண்டிஸ் தேர்வில் ஏற்கனவே 1984 ம் ஆண்டு வாரிய உத்தரவின்படி வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்யப்படாததால்தான் வடமாநிலத்தவர்கள் அதிக சேர்க்கைக்கு மூல காரணமாக அமைந்து விட்டதாக ரயில்வே தொழிற்சங்கம் கூறியுள்ளது. அப்ரண்டிஸ் என அழைக்கப்படும் தொழில் பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை கோவை போத்தனூர் மற்றும் திருச்சி பொன்மலை ரயில்வே தொழிற்சாலைகளில் இரண்டு மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. பொன்மலை தேர்வு மையத்தில் 873 தொழில் பழகுநர் இடங்களுக்கும், போத்தனூர் மையத்தில் 2 ஆயிரத்து 650 தொழில் பழகுநர் இடங்களுக்கும் விண்ணப்பங்கள் கோரப்பட்டன. இதற்கான கல்வித் தகுதி ஐடிஐ எனப்படும் தொழில்பயிற்சி நிறுவன சான்று மற்றும் குறிப்பிட்ட ஒரு சில பிரிவிற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. பத்தாம் வகுப்பு, ஐடிஐ மதிப்பெண்கள் சேர்த்து 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டு கூடுதல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடைபெற்றது.
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கு ஊக்கத்தொகையாக மாதம் ஒன்றுக்கு முதல் ஆண்டில் 5 ஆயிரத்து 700, இரண்டாம் ஆண்டில் 6 ஆயிரத்து 300, மூன்றாம் ஆண்டில் 7 ஆயிரத்து 300 வழங்கப்படும். பயிற்சி முடித்தவர்களுக்கு ரயில்வே வேலையும் எளிதாக கிடைக்கும். பொன்மலை மையத்தில் 1600 வடமாநிலத்தவர்கள், 150 தமிழகத்தினர் சேர்த்து 1750 பேர், கோவை போத்தனூர் மையத்தில் 1187 வட மாநிலத்தவர்கள், 126 தமிழகத்தினர், 622 மற்ற தென் மாநிலத்தவர்கள் சேர்த்து மொத்தம் 1935 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். இந்த தேர்வு முறையில் முறைகேடுகள் நடந்துள்ளது, தமிழக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் பறிபோய் விட்டது என குற்றச்சாட்டுகள் கடுமையாக எழுந்துள்ளது.
இதுகுறித்து தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் மாநில பொதுச் செயலாளர் மனோகரன் கூறியதாவது:-
100 கி.மீ சுற்றளவிற்குள் குடியிருப்பவர்களை மட்டுமே தேர்வு செய்ய வேண்டும். குறைந்தது 30 முதல் 40 சதவீதம் பேர் அந்த தொழிற்சாலைகளை சுற்றியுள்ள பின் தங்கிய பகுதிகளில் இருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என 5.5.1984 தேதியிட்ட ரயில்வே வாரிய உத்தரவு தெளிவாக வரையறுத்து உள்ளது. எனவே பொன்மலை மற்றும் போத்தனூர் ரயில்வே தொழிற் சாலைகள் அப்ரன்டிஸ்கள் தேர்விற்கு வசிப்பிட தகுதி நிர்ணயம் செய்ய தவறி விட்டன. இந்த வாய்ப்பை பயன்படுத்தி மற்ற மாநிலத்தவர்கள் விண்ணப்பித்து தேர்வாகி உள்ளனர். எனவே 1984 ம் ஆண்டு ரயில்வே வாரியம் போட்ட உத்தரவின் படி தமிழகத்தை சேர்ந்தவர்களை மட்டுமே ரயில்வே தொழிற்சாலை தொழில் பழகுநர் பயிற்றுனராக தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.