×

கஜா புயல் நிவாரணம் கேட்டு போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கஜா புயலின்போது நிவாரணம் கேட்டு சாலைமறியல், போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்கு விசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகை திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கஜா புயல் கடுமையாக தாக்கியது. இதில் ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் நாசமாயின.  இந்த பேரழிவுக்கு அரசுத் தரப்பில் உரிய நிவாரணம் தரப்படவில்லை. இதையடுத்து, தங்களது வீடுகள், நிலங்கள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரி நாகை மாவட்டம் வேதாரண்யம்  தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த இனியவன் உள்ளிட்ட நூறுக்கும் மேற்பட்டவர்கள்,   நிவாரணம் கேட்டு போராடினர்.  அப்போது, போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். பின்னர் போராட்டம் நடத்திய 140க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

 இந்த வழக்கு விசாரணை தற்போது வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது.  இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரி சென்னை ராஜேந்திரன், ரங்கசாமி உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தனர். வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் விஜயேந்திரன் ஆஜராகி, நியாயமான முறையில் நிவாரணம் கேட்டதற்காக மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. எனவே வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.  வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் நிவாரணம் கேட்டு சாலை மறியல் போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் வேதாரண்யம் நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு  தடை விதித்து உத்தரவிட்டார்.

Tags : trial ,Ghazh ,Madras High Court , Gajan Storm Relief, case, Chennai High Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...