சென்னை: ஏழு பேர் விடுதலையில் ஆளுனருக்கு இருந்த தடையும் நீங்கியதால், உடனே அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தீர்ப்பின்படி 27 ஆண்டுகாலம் ஏழு பேர் சிறையில் வாடி வருகின்றனர். இவர்களை விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருந்தும், பல்வேறு அரசியல் மற்றும் சட்ட ‘‘சித்து விளையாட்டுகளால்’’ தள்ளிப் போடப்பட்டு வந்துள்ளது.
ராஜீவ் காந்தியோடு உயிரிழந்த குடும்பத்தினரால், இவர்களின் விடுதலையை எதிர்த்து தொடுக்கப்பட்ட அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தால் இப்பொழுது தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், இனி இதனைக் காரணம் காட்ட முடியாது இருந்த தடையையும் அதிகாரப்பூர்வமாக உச்சநீதிமன்றமே நீக்கிவிட்டதால், வேறு காரணங்களைத் தேவையின்றி சொல்லி, தமிழ்நாடு ஆளுநர் ஏழு பேர்களின் விடுதலையை, மேலும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக விடுதலை செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்துகிறோம். இதற்கு மேலும் மத்திய அரசு முரண்டு பிடிக்கக் கூடாது என்பதே நமது அழுத்தமான வேண்டுகோள் ஆகும்.