×

மாணவர்களுக்காக பிளஸ் 2 தேர்வு எழுதிய ஆசிரியர் சிக்கினார்: கேரளாவில் பெரும் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் பிளஸ்2 தேர்வில் மாணவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தேர்வு எழுதிய சம்பவத்தில் பள்ளி முதல்வர் உள்பட 3 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். கேரளாவில் இந்தாண்டுக்கான பிளஸ் 2 அரசு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் நடந்தன. மொத்தம் 3,69,238 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 84.33 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த வருடம் 83.75 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்தநிலையில் கோழிக்கோட்டில் ஒரு பள்ளியில் மாணவர்களுக்காக ஆசிரியரே தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பள்ளி மாணவர்களின் தேர்வுத்தாளை திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள் தான் இதை கண்டுபிடித்தனர். பல ேதர்வு தாளில் ஒரே போன்ற கையெழுத்து இருப்பதை கண்ட ஆசிரியர்கள் சந்தேகமடைந்து, அந்த மாணவர்கள் எழுதிய மற்ற தேர்வுத்தாள்களை வரவழைத்து பரிசோதித்தனர். அப்போது தான் தேர்வு எழுதியதில் உள்ள தில்லுமுல்லு தெரியவந்தது. இதையடுத்து தேர்வுத்தாளை திருத்திய ஆசிரியர்கள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தேர்வு எழுதிய சந்தேகமுள்ள மாணவர்களை திருவனந்தபுரம் வரவழைத்து அவர்களை எழுத வைத்து பரிசோதித்தனர். அப்போது குறிப்பிட்ட தேர்வு எழுதியது மாணவர்கள் இல்லை என்பது தெரியவந்தது.

தொடர் விசாரணையில், மாணவர்களுக்காக தேர்வு எழுதியது கோழிக்கோடு நீலேஸ்வரம் அரசு மேல்நிலைபள்ளி ஆசிரியர் நிஷாத் வி.முகம்மது என தெரியவந்தது. இவர் இப்பள்ளியில் 2 மாணவர்களுக்காக பிளஸ்2 ஆங்கில தேர்வும், 2 மாணவர்களுக்காக பிளஸ் 1 கம்ப்யூட்டர் தேர்வும் எழுதியுள்ளார். இந்த சமயத்தில் மாணவர்கள் தேர்வு அறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்த போது ஆசிரியர் நிஷாத் அலுவலகத்தில் வைத்து தேர்வு எழுதியுள்ளார். தேர்வு முடிந்த பிறகு விடைத்தாள்களை கொடுத்த பின்பு ஆசிரியர் எழுதிய விடைத்தாள் இணைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் மங்களூர் அரசு மேல்நிலை பள்ளி ஆசிரியர் பைசல், நீலேஸ்வரம் அரசு பள்ளி முதல்வர் ரசியா ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து மேற்படி 3 பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதற்கிடையே அதே பள்ளியில் 32 மாணவர்களின் தேர்வு தாளில் திருத்தம் செய்யப்பட்டிருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் மேற்படி 4 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கூடுதல் விசாரணைக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : author ,examination ,Plus 2 , Teacher, Exam, Plus 2, Student, Kerala
× RELATED தேர்வு நிறைவு பெற்றுவிட்ட நிலையில்...