சென்னை: தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து கோயில் செயல் அலுவலர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அறநிலையத்துறை கமிஷனர் பணீந்திர ரெட்டி அனைத்து மண்டல இணை ஆணையர்கள், செயல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,
கோயில்களுக்கு வருகைபுரியும் பக்தர்கள் தங்களது வாகனங்களை வாகனம் நிறுத்துமிடத்தில் நிறுத்தாமல் கோயில் வளாகங்களில் மற்றும் மண்டபங்களில் ஆங்காங்கே நிறுத்துவதாகவும், இதனால் கோயில்களுக்கு வருகை புரியும் பக்தர்களுக்கு கோயில் உள்ளே நுழைய இடையூறு ஏற்படுவதாகவும் இவ்வலுவலக கவனத்திற்கு வரப்பபெற்றுள்ளது. எனவே, இடையூறுகள் ஏற்படா வண்ணம் கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் கோயிலின் உள்ளே தங்கு தடையின்றி சென்று வருவற்கு கீழ்க்கண்ட அறிவுரைகள் பின்பற்றி வாகனங்களை நிறுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து சார்நிலை அலுவலர்களையும் கேட்டு கொள்ளப்படுகிறது.
* கோயிலுக்கு வருகை புரியும் பக்தர்கள் கொண்டு வரும் வாகனங்களை கோயில் வாகன நிறுத்துமிடங்களில் நிறுத்த ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
* வாகன நிறுத்துமிடத்தை பொது ஏலம்/டெண்டர் மூலம் நடத்தி கோயிலுக்கு வருவாய் ஈட்ட நடவடிக்கை வேண்டும்.
* பொது ஏலம்/டெண்டர் மூலம் நடத்தப்படும் வாகன நிறுத்துமிடங்களில் புகார்கள் ஏதும் ஏற்படா வண்ணம் அவ்வபோது கண்காணிக்கப்பட வேண்டும்.
* வாகன நிறுத்துமிடங்கள் தவிர மற்ற இடங்களில் வாகனங்களை நிறுத்துவதை தவிர்த்து அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துவதற்கென ஒரு பணியாளரை ஒதுக்கீடு செய்து தினமும் கண்காணிக்கப்பட வேண்டும்.
* பக்தர்கள் வாகனங்களை தவறுதலாக கோயில் வளாகத்தில்/மண்டபங்களில் நிறுத்தினால் அவ்வாகனம் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபாரதம் விதிக்க உரிய அனுமதி பெற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* கோயில் வாகன நிறுத்துமிடங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.