மேற்கு வங்க மாநிலத்தில் மக்களவை தேர்தல் 7 கட்டமாக அறிவிக்கப்பட்டது. இதில், கடந்த மாதம் 11ம் தேதி முதல் இம்மாதம் 6ம் தேதி வரையில் 5 கட்ட தேர்தல் முடிந்துள்ளது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 42 தொகுதிகளில் 25ல் வாக்குப்பதிவு முடிந்து விட்டது. மீதமுள்ள 17 தொகுதிகளில் நாளை மறுதினம் 8 தொகுதிகளில் 6ம் கட்டத் தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.இம்மாநிலத்தில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், இம்மாநில முதல்வருமான மம்தா பானர்ஜியை வழக்கம் போல் விமர்சித்தார்.
அவர் பேசுகையில், “தீதி (மம்தா) இந்த நாட்டின் பிரதமராகவும், தேசத்தின் தலைவராகவும் என்னை ஏற்க தயாராக இல்லை என வெளிப்படையாக கூறுகிறார். ஆனால், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானை ஏற்பதில் பெருமை கொள்கிறார். என்னை பிரதமராக ஏற்க மாட்டேன் என்பதின் மூலம் அரசியலமைப்பை அவர் அவமதிக்கிறார். புயல் பாதிப்பின்போது எனது தொலைபேசி அழைப்பை ஏற்பதற்கு அவர் தயாராக இல்லை. புயல் பாதிப்பு பற்றி மாநில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு முயன்றது. ஆனால், மம்தா அதையும் அனுமதிக்கவில்லை,” என்றார்.