ஆவடி: திருமுல்லைவாயல், பழைய காவல் நிலையம் அருகே சிடிஎச் சாலையோரம் சிவசுப்பிரமணியம் என்ற வாசு (58) என்பவருக்கு சொந்தமாக 23 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதி நரிக்குறவர்கள் ஆக்கிரமித்து குடிசைகள் கட்டி இருந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, வாசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பேரில், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, நேற்று முன்தினம் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் போலீசார் ஆக்கிரமிப்பை அகற்ற பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட நரிக்குறவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும், அந்த நேரத்தில் அப்பகுதியில் இருந்த இரு குடிசைகளை சிலர் தீ வைத்து கொளுத்தினர். தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், அதே பகுதியை சேர்ந்த நரிக்குறவர்கள் பார்த்திபன் (22), குட்டியப்பன் (35) ஆகியோர், குடிசைகளுக்கு தீ வைத்தது தெரிந்தது. அவர்களை நேற்று கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.