மும்பை: ஆசியாவிலேயே மிகப்பெரிய குண்டு பெண்ணான மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டம் வசாயை சேர்ந்த அமிதா ரஜனி (42), 300 கிலோவுக்கும் மேல் எடை கொண்டவராக இருந்தார். மும்பை மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையை தொடர்ந்து அவருடைய எடை கடந்த நான்கு ஆண்டுகளில் 214 கிலோ குறைந்துள்ளது. அமிதாவுக்கு சிகிச்சை அளித்து வரும் உடல் எடை குறைப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் சஷாங் ஷா இதை அறிவித்தார். அமிதாவுக்கு அவருடைய 6 வயதிலேயே, உடல் எடை அதிகரிக்கும் பிரச்னை தொடங்கியது. 3 கிலோ எடையுடன் நல்ல ஆரோக்கியமாக பிறந்த அமிதாவுக்கு திடீரென உடல் எடை அதிகரிக்கத் தொடங்கியது. அவருக்கு 16 வயது ஆன போது 126 கிலோ எடையுடன் இருந்தார். எந்தவொரு நடவடிக்கையிலும் எளிதில் ஈடுபட முடியவில்லை.
பிறகு விரைவிலேயே எடை 300 கிலோவாக அதிகரித்தது. அதனால் குடும்பத்தினர் உதவியின்றி அவரால் எதுவுமே செய்ய முடியவில்லை. மூச்சு விடுவதிலும் பிரச்னை ஏற்பட்டது. செயற்கை சுவாச உதவி தேவைப்பட்டது. பாந்த்ராவில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் எடைக்குறைப்பு அறுவை சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்காக சிறப்பு வசதிகளை செய்ய வேண்டியதிருந்தது. கடந்த 2015ம் ஆண்டில் அமிதாவுக்கு இரண்டு கட்டமாக அறுவை சிகிச்சை ெசய்யப்பட்டது. அதன் பிறகு கடந்த நான்கு ஆண்டுகளில் அவருடைய உடல் எடை 214 கிலோ குறைந்து விட்டது.