*விவசாயிகள் எதிர்பார்ப்பு
தரங்கம்பாடி : நாகை மாவட்டம், தில்லையாடியில் மகிமலை ஆற்றில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தில்லையாடி வழியாக செல்லும் மகிமலை ஆறு தில்லையாடி, திருவிடைக்கழி, அனந்தமங்கலம், எருக்கட்டாஞ்சேரி உள்பட 15ம் மேற்பட்ட கிராமங்களில் 10ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது. இந்த ஆற்றில் ஆகாயத் தாமரைகள் படர்ந்து இருப்பதால் அவைகளை அகற்றி தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தில்லையாடி விவசாயி கலியபெருமாள் கூறியதாவது, மகிமலை ஆற்றுப் பாசனம் 10ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடிக்கு பயன்படுகிறது. ஜூன் மாதம் தண்ணீர் வரும் என்பதால் அதற்குள் ஆகாயத் தாமரைகளை அகற்றி ஆற்றையும் தூர்வார வேண்டும். மேலும் இந்த ஆற்றிலிருந்து 15க்கும் மேற்பட்ட பாசன வாய்க்கால்கள் பிரிந்து செல்கின்றன. அந்த பாசன வாய்க்கால் தலைப்புகளில் உள்ள மதகில் பலகை அமைக்க வேண்டும். அப்போது தான் தண்ணீர் வீணாக கடலில் சென்று கலக்காமல் பாசனத்திற்கு பயன்படும். பொதுப்பணித் துறை உடனே கவனம் செலுத்தி தண்ணீர் வருவதற்குள் மகிமலை ஆற்றையும், பாசன வாய்க்கால்களையும் சீர்செய்து தர வேண்டும் என்று கூறினார்.