திருமலை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. வருகிற 12-ம் தேதி இரவு ஐதராபாத்தில் இறுதி போட்டி நடக்கிறது. மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அவரது மனைவி ரித்திகா, குழந்தை சமைரா ஆகியோருடன் இன்று காலை திருப்பதி வந்தார். காலை 5 மணிக்கு ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சாமி தரிசனம் செய்தார்.
தேவஸ்தான அதிகாரிகள் அவரை வரவேற்று லட்டு பிரசாதம் வழங்கினர். 6 மணிக்கு கோவிலில் இருந்து புறப்பட்டு சென்றார். ஐ.பி.எல். இறுதி போட்டியில் வெற்றி பெற வேண்டி அவர் சாமி தரிசனம் செய்ததாக உடன் வந்தவர்கள் தெரிவித்தனர். கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று காலை சுப்ரபாத தரிசன சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்தார்.